திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. 500 காளைகள் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில், புனித வனத்து அந்தோணியார் ஆலய 4-ம் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. திருச்சி, சிவகங்கை, தேனி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து 500 காளைகளும், 300 மாடு வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பீரோ, கட்டில், நாற்காலி, தலைக்கவசம், சைக்கிள், அண்டா, எவர்சில்வர் பாத்திரங்கள், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள், அதன் திமிலைப்பிடித்து அடக்கினர். இதில் நத்தம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாடுபிடிவீரர், மாடு முட்டியதில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதேபோல், புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 850 காளைகள், வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. 425 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று, காளைகளை அடக்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே, ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக, கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து ஜல்லிக்கட்டை நடத்தின. 900 மாடுகளும், 820 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், அடக்க முடியாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டினை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நெடுங்குளம் கிராமத்தில், அனைத்து சமுதாய மக்களின் நல்லிணக்கத்திற்காக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. மதுரை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 350 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன. 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். அவசர உதவிக்கு 3 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.