தேசிய ஊரடங்கால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 400 கோடி ரூபாய் வருமானம் பாதிப்பு - தேவஸ்தானம் நிர்வாகிகள் தகவல்
May 11 2020 1:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில், 40 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால் உண்டியல் வருமானம் இல்லாமல், 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஏழுமலையானை தரிசனம் செய்ய நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை திருப்பதி வந்து செல்வார்கள் என்றும், தேவஸ்தானத்தின் ஆண்டு செலவு, 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்றும், அதில் ஆயிரத்து 300 கோடி ரூபாய், பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பொது முடக்கம் காரணமாக திருப்பதி கோயில், 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் 400 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழல் இருப்பதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. ஏழுமலையான் பெயரில் வங்கிகளில் 8 டன் தங்கக்கட்டிகள் இருப்பும், 14 ஆயிரம் கோடி ரூபாய், நிரந்தர வைப்பு நிதியும் உள்ள போதிலும், அதனை தொடாமல், தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க யோசித்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிதி சுமையை சமாளிக்க பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்தும், தேவஸ்தானம் தொடர்புடைய கல்வி நிறுவனங்களிடம் இருந்தும் நிதியை பெற தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.