திருப்பதி ஏழுமலையானை மீண்டும் தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி - சோதனை முயற்சியாக தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை
Jun 2 2020 4:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு போடப்பட்டது. அதன் எதிரொலியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களாக சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் தரிசிக்க தேவையான ஏற்பாடுகளை செய்திருப்பதாவும், மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தால், பாதுகாப்புடன் பக்தர்களை அனுமதிக்கலாம் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் ஏழுமலையானை தரிசிக்க சோதனை அடிப்படையில் அனுமதிக்கலாம் என தேவஸ்தான நிர்வாகத்திற்கு, ஆந்திர மாநில அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து, தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி முதல், கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.