பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - மன்னர் குடும்பத்தினர் வரவேற்பு
Jul 13 2020 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்தினரே நிர்வகிப்பதை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக மன்னர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருக்கோயிலில் உள்ள 5 பாதாள அறைகள், கடந்த 2011-ம் ஆண்டில் 7 பேர் கொண்ட அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன. அதில், தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் 18 அடியில் தங்க மாலை இருந்தன. இவற்றின் அன்றைய மதிப்பு ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தக்கோவிலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் பாதுகாத்து வருகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் தற்போது, கோவிலை பராமரித்து வரும் நிலையில், பெரிய அளவில் உள்ள 6 -வது அறை திறக்கப்படாமல் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இக்கோயிலை நிர்வகிப்பதில் மன்னர் குடும்பத்திற்கு இருக்கும் உரிமை நிலைநாட்டப்படுவதாகவும் தெரிவித்தது. மேலும், இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிபதி தலைமையில் கோயிலை நிர்வகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரச குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். மேலும் இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.