மஹாளய அமாவாசை இன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி தங்கள் முன்னோர்களுக்கு மக்கள் தர்ப்பணம் அளித்து வருகின்றனர். முக்கிய புனித ஸ்தலங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால் மாற்று இடங்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
முன்னோர்களை நினைத்து வழிபடும் மஹாளய அமாவாசை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக முக்கிய புனித ஸ்தலங்களில் மக்கள் கூடுவதற்கும், தர்ப்பணம் கொடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடங்கள் வெளிச்சோடி காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள புனித ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடற்கரையில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவது வழக்கம். ஆனால் தடை உத்தரவு காரணமாக அப்பகுதி இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.
அதேவேளையில், ராமநாதசுவாமி கோவிலில் குறிப்பிட்டளவு பக்தர்கள் சாதாரண தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துசாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் தாயாரம்மன் குளத்தில் ஏராளமானோர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
சேலம் அணைமேடு பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் ஏராளமான மக்கள், எள், அரிசி, காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்டவற்றை படைத்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா தொற்று அச்சத்தால் அர்ச்சகர்கள் இல்லாமல், பொதுமக்களே தர்ப்பணம் கொடுத்து வழிபட்டுச் சென்றனர். சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு பொதுமக்கள், முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் காவிரி ஆறு, திருமுக்கூடல், மாயனூர் காவிரி ஆறு போன்ற இடங்களில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அரிசி, பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மஹாளய அமாவாசையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வராகநதி கரையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியன் கோவில் அருகே மருத மரங்களுக்கு இடையே முன்னோர்களுக்கு ஏராளமானோர் திதி கொடுத்தனர். சுருளி ஆற்றிலும் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கடந்த 15-ம் தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மக்கள் கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.
முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் பொதுமக்கள் பாரம்பரிய முறைகளைக் கைவிடாத வண்ணம், மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கொரோனா ஊரடங்கால், நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் மஹாளய அமாவாசையொட்டி, பொதுக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி படித்துறை முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன.