திருவண்ணாமலை கோயிலில் போலீசாரின் பாரபட்சம் : காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி - பக்தர்கள் புகார்
Nov 29 2020 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொரோனா வழிகாட்டு நெறிமுறை என்ற பெயரில் காவல்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதாகவும், சாமானிய மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப விழாவின் பத்தாம் நாள் விழாவான இன்று மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அதற்கு முன்பாக இன்று காலை கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் கொரோனா தடுப்பு நெறிமுறை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்களே இல்லாமல் நடத்தப்படும் விழா என்றபோதிலும், அங்கு 2 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதன் அவசியம் என்ன என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார்களுக்கு மட்டுமே காவல்துறையினர் அனுமதி வழங்குவதாகவும், சாமானியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்து சமய அறநிலை துறை அமைச்சர் விழாவில் கலந்து கொள்ள வந்த போது அவருடன் வந்த ஆளுங்கட்சியினரில் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.