திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Nov 30 2020 11:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மாகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகாதீபத்தையொட்டி செப்புத்தகடால் செய்யப்பட்ட 5 புள்ளி 2 அடி உயரம் கொண்ட கொப்பரை தயாரிக்கப்பட்டது. ஆயிரம் மீட்டர் பருத்தித் துணியில் திரி தயாரிக்கப்பட்டு, 3 ஆயிரத்து 500 கிலோ நெய் கொண்டு, மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள, இரண்டாயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை நகர வாழ் பக்தர்கள் பட்டாசு வெடித்தும், தங்களது வீடுகளில் தீபம் ஏற்றியும் அண்ணாமலையானுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். கொரோனா பரவலால் கிரிவலம் வரவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், கோவிலுக்குள் இருந்து தீபத்தை காணவும், அர்த்தநாரீஸ்வரரை காணவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோவிலுக்குள் அதிகாரிகள், நீதித்துறையை சேர்ந்தவர்கள், காவல்துறையினர், மக்கள் பிரதிநிதிகள், ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் என சுமார் 2,500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.