சபரிமலை மகர விளக்கு பூஜை நாளையுடன் நிறைவு - இன்று மட்டும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
Jan 19 2021 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு நாளையுடன் நிறைவடைவதையொட்டி, இன்று மட்டும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மகர விளக்கு பூஜைகளின் நிறைவாக இன்று இரவு மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி சமர்ப்பன சடங்கு நடைபெறவுள்ளது. அதில் பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். இன்று கோவிலில் நெய்யபிஷேகம் நடைபெறாது என்றும், பக்தர்கள் இன்று வரை மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெறும். 6 மணிக்கு பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் சாமி தரிசனம் செய்த பிறகு நடை அடைக்கப்படும். பின்னர் ராஜ குடும்ப பிரதிநிதிகளின் தலைமையில் சன்னிதானத்தில் இருந்து திருவாபரணங்கள் தாங்கிய பேழையுடன் ஊர்வலம் பந்தளம் நோக்கி புறப்படும். அத்துடன் 2020-2021 மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெறும். மாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளது.