ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் - பக்தர்களுக்கு அனுமதி மறிப்பு
May 1 2021 12:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நம்பெருமாள், கருவறையிலிருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். அதன்பிறகு கொடிக்கு, அர்ச்சகர்கள் பல்வேறு பூஜைகள் செய்து, கொடியேற்றம் நடைபெற்றது. இதன்பின்னர், நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டு, கொடியேற்ற மண்டபத்திலிருந்து கண்ணாடி அறை மண்டபத்துக்கு சென்றார்.
முக்கிய நிகழ்வான சித்திரைத் தேர் திருவிழா, வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா தடை உத்தரவு காரணமாக இந்த ஆண்டும், சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் திருக்கோயில் வளாகத்திற்குள்ளேயே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற உள்ளது. சித்திரைத் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருக்கோயில் youtube சமூக வலைதளத்தில் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.