தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்கள் சுவாமி தரிசனம்
Sep 16 2021 4:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உடையன்குடிக்காடு கிராமத்தில், கருப்பாயிரம், மதுரைவீரன், கருப்பசாமி மற்றும் ஐந்து தலை நாகவள்ளி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். இதனையடுத்து அருள்மிகு ஸ்ரீ கரும்பாயிரம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி சமுதாயநல்லூர் புதூர் கிராமத்தில் எழுந்தருளிய ஸ்ரீ வீரவிஜய் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 35 உயர ஆஞ்சநேயர் சிலைக்கும் ஆலய கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த கலசங்களும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வீரவிஜய ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, மேலக்கால் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக வேள்விக்குப் பின்னர், கோபுர கலசத்திற்கு மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குறைவான பக்தர்கள் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், அழகு வள்ளி அம்மன் கோவில் முளைப்பாரி விழாவையொட்டி பக்தர்கள் வினோதமான முறையில் சாக்கு வேடம் அணிந்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். திருவிழாவின் கடைசி நாளாக பக்தர்கள் வினோதமான முறையில் தங்களது உடல்களுக்கு சாக்குகளை ஆடைகளாக தைத்து அதற்குள் வைக்கோலை இறுக்கமாக தினித்து பின்னர் கோனூசியால் சணல் வைத்து தைத்து, வேடம் அணிந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இதில் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.