ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Oct 20 2021 8:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி, சென்னையில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் பிரசித்திபெற்ற கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகில் புகழ்பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மகாமகக் குளக்கரையை சுற்றி அமைந்துள்ள 16 வகையான சோடச லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் கோயிலில், ஐப்பசி பௌர்ணமியையொட்டி, கைலாசநாதர் உடனுறை தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு மஞ்சள், பால், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன. சமூக இடைவெளியைப் பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில் அன்னாபிஷேக பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. 60 கிலோ பச்சரிசியால் சாதம் வடிக்கப்பட்டு, லிங்கத்தின் மீது அன்னகாப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. லிங்கத்தின் மீது சாத்தப்பட்டிருந்த சாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே திருமங்கலம் கிராமத்தில் புகழ்பெற்ற பூலோக நாயகி சமேத பூலோகநாத சுவாமி ஆலயத்தில், சுவாமிக்கு 18 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நெல் அரிசி சாதம் கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
பெரம்பலூர் அருகே சோழர்கால புகழ்பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோவிலில் ஆயிரத்து எட்டு கிலோ அரிசியைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. கயிலாய வாத்தியங்கள் முழங்க மூலவருக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.