பழனி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா - நாளை முதல் 3 நாட்களுக்கு அனுமதியில்லாததால், இன்று இரவுக்கு தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்
Jan 13 2022 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில், சுவாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தைப்பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், வரும் 17-ம் தேதி திருக்கல்யாணமும், 18-ம் தேதி தைப்பூசத் திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தைப்பூச விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பல கிலோமீட்டர் தொலைவில் இருந்து காவடி சுமந்து, பாத பாத்திரையாக பக்தர்கள் பலர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். நாளை முதல் தைப்பூசத் தேரோட்டம் நடைபெறும் 18-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என திருக்கோயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக, பக்தர்கள் பலரும் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பக்தர்கள் தவித்து வருகின்றனர்.