பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி திருக்கல்யாண வைபவம் : அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வானை சமேதராக மணக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்
Jan 18 2022 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில், தைப்பூசத் திருவிழாவையொட்டி அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்தில் எளிய முறையில் நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில், தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம், அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு பால், பஞ்சாமிர்தம், பழங்கள், விபூதி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளும், சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பக்தர்கள் இன்றி அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள் பங்கேற்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதேபோல், தைப்பூச தினத்தையொட்டி, பெரியநாயகி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று, பக்தர்கள் இன்றி, சிறிய அளவிலான தேரில் தேரோட்ட நிகழ்ச்சி நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.