பழனி பால தண்டாயுதபாணி கோவில் 5 நாட்களுக்கு பின் திறப்பு : சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
Jan 19 2022 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி மலைக்கோயில் 5 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட நிலையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. தொற்று பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய 5 நாட்களாக அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்றும், நாளையும் சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இன்று அடிவாரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
வெளியூரிலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கடந்த இரு நாட்கள் மலையடிவாரத்திலேயே தங்கி உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் விரைவாக சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் அதிகாலை 4 மணிக்கே நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளதால் திண்டுக்கல், தேனி, மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 400 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முடிகாணிக்கை மண்டபத்திலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.