உசிலம்பட்டி அருகே கோவிலில் முதல் மரியாதை யாருக்கு? - இரண்டு தரப்பினர் மோதிக்கொண்டதில் 6 பேர் காயம்
Jul 26 2022 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, கோயிலில் முதல் மரியாதை கொடுப்பதில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், கோயிலின் உள்ளேயே ஒருவரையொருவர் மாறிமாறி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள ஈஸ்வரி கோயிலில், கடந்த மாதம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்றுடன் 48 நாள் பூஜை முடிவடையும் நிலையில், ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட இருந்தது. அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கோயில் தூண்களில் கட்டப்பட்டிருந்த கம்புகளை பிடுங்கி, இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து நேரில் சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இந்த மோதலில் காயமடைந்த 6 பேர், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.