புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய ஆண்டு திருவிழா - 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் தொடக்கம்
Jul 26 2022 1:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா ஆலய ஆண்டு திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயம், ரோம் நகரின் பசலிகா அந்தஸ்து பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும் ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை பொதுமக்கள் பங்கேற்புடன் இந்த ஆலயத்தின் 440ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து 2ஆவது திருப்பலியும் நடைபெற்றன. பின்னர், கொடி பட்டம், ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடி மரத்தில் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
அப்போது கூடியிருந்த மக்கள், பலூன்களையும் புறாக்களையும் பறக்க விட்டனர். பின்னர் கொடி மரத்திற்கு பக்தர்கள் பூக்களையும் பாலையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். பத்து நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர தேர் பவனி நிகழ்ச்சி, அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. பனிமய மாதா ஆலய திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.