கரூர் அருகே ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் வழிபாடு : ஏராளமான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன்
Aug 4 2022 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
கரூர் அடுத்த மேட்டு மகாதானபுரத்தில் சுமார் 400 ஆண்டுகால பழைமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19ம் தேதியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். வழக்கம் போல இந்த ஆண்டும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஆடி மாதம் 1ம் தேதி முதல் விரதம் மேற்கொண்டு 18 நாட்கள் கழித்து இன்று நடைபெற்ற இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிக்காக ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பக்தி பரவசத்துடன் கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து காத்திருந்தனர். தொடர்ந்து கோவில் பாரம்பரிய பூசாரி மகாலட்சுமிக்கு அலங்கார அபிஷேகம் செய்த பின்பு மேள தாளங்கள் முழங்க வழிபாடுகள் தொடங்கின. இதை தொடர்ந்து அம்மனின் அருளை பெற அமர்ந்து இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காயை உடைத்தார்.