திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி விழா : முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் முத்துக்குடைகளுடன் ஊர்வலம்
Sep 22 2022 2:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில், மன்னர் கால பாரம்பரிய முறைப்படி பங்கேற்க கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து அம்மன் விக்ரகம் முத்துக்குடைகளுடன் ஊர்வலமாகப் புறப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் மன்னரின் உடைவாளுடன் ஊர்வலமாக புறப்பட்டு திருவனந்தபுரம் செல்வது வழக்கம். விழாவில் சாமி சிலைகளை வைத்து பூஜைகள் நடைபெற்ற பின்னர், மீண்டும் சாமி சிலைகள் கொண்டு வரப்படும்.
திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 26-ம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள முன்னுதித்த நங்கை அம்மன் கோயிலில் இருந்து பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக - கேரள போலீசாரின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
அதன்பின்னர் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோயில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அம்மன் ஆஸ்ராமம், கோட்டார், பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுக்குறி வழியாக தக்கலை அருகே உள்ள பத்பநாபபுரம் அரண்மனையை அம்மன் விக்ரகம் இன்று அடைகிறது. பின்னர், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் பல்லக்கு வாகனத்திலும், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.