மஹாளய அமாவாசை - முன்னோர்களுக்கு திதி : தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Sep 25 2022 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாளய அமாவாசையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மஹாளய அமாவாசையையொட்டி, ஏராளமானோர் அதிகாலையிலேயே திரண்டனர். அங்கு முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சடங்குகளை அவர்கள் செய்தனர்.
திருவள்ளூர் வீரராக பெருமாள் கோயிலில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அங்குள்ள ஹிருத்த பாபநாசினி என்று அழைக்கப்படும் கோயில் குளத்தில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதுடன் அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணங்கள் செய்து ஏராளமான மக்கள் புனித நீராடினர். இதில், குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர். இதனையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.