தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் கோயில் கடற்கரையில் நள்ளிரவு மகிஷாசூர சம்ஹாரம்
Oct 5 2022 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூர சம்ஹாரம் இன்று நள்ளிரவு கோயில் கடற்கரைப் பகுதியில் நடைபெறுகிறது. இதையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு வேடமணிந்து வாத்தியக் கருவிகள் முழங்க நடனமாடி வருகின்றனர்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்குமேல், கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இவ்விழா பக்தர்கள் கூட்டமின்றி எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர்.
வேடமணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், இசை வாத்தியங்கள் முழங்க கையில் அக்னிச்சட்டி ஏந்தி காளியாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி வருகின்றனர்.
பக்தர்கள் வருகையை முன்னிட்டு குலசேகரப்பட்டினத்தில் 2 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 48 சி.சி.டி.வி. கேமரா மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.