கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
Nov 22 2022 2:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நஞ்சியம்பாளையம் கிராமத்தில், உலக மக்கள் நலம் பெற வேண்டி, பிரமாண்ட சிவலிங்கம் அமைக்கப்பட்டு, மகா யாகம் நடத்தப்பட்டது. அத்திக்குச்சி, நாயுருவி குச்சி, எருக்கன் குச்சி,வில்வக் குச்சி உள்ளிட்ட 1008 மூலிகை சமித்து குச்சிகளை அக்னியில் போட்டு மகா யாகம் வளர்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 3000 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயூரநாதர் ஆலயத்தில் கார்த்தி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மயூரநாதருக்கு ஆயிரத்து எட்டு சங்குகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மயூரநாதரை வழிபட்டனர்.
திருச்சி மண்ணச்சநல்லூரில் அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. 108 சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூலவர் சுவாமிகளுக்கு ஊற்றப்பட்டு மலர் அலங்காரத்தோடு மஹா தீபாராதனை செய்யப்பட்டது.
கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலில் அமைந்துள்ள விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 108 சங்குகளில் நிரப்பிய புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
காரைக்கால் திருநள்ளாற்றில் அமைந்துள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் 108 சங்குகள் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. யாகம் முடிந்து புனித நீர் அடங்கிய இரண்டு வலம்புரிச் சங்குகளை, சிவாச்சாரியார்கள் ஏந்தி, ஆலய பிரகாரத்தை வலம் வந்து, ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிக்கும் ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாளுக்கும் சங்காபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேதபுரீஸ்வரரை வழிபட்டனர்.