திருவாரூர்: முத்துப்பேட்டை தர்காவின் 721ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Nov 26 2022 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற முத்துப்பேட்டை தர்காவின் 721ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
முத்துப்பேட்டையில் அமைந்துள்ள ஹக்கீம் செய்குதாவூது காமில் ஒலியுல்லா தர்க்கா, அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் சிறப்பு பெற்றதாகும். இந்த தர்காவின் 721ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இந்தியாவில் உள்ள தர்க்காக்களில் மிகவும் பழமையானதும், மத வேறுபாடின்றி அனைத்து மதத்தினரும் வழிபடும் சிறப்பு கொண்டதுமான இந்த தர்க்கா, தென்னிந்தியாவின் அற்புத மருத்துவ சாலை என்றும் போற்றப்படுகிறது.
அதாவது மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளும், செய்வினை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தர்க்காவில் அடக்கமாகியுள்ள மகானை வழிபடுவதன் மூலம் பூரண குணம் அடையலாம் என்பது மதபகுபாடின்றி அனைவரது நம்பிகையாக இருந்து வருகிறது.
அத்தனை சிறப்பு கொண்ட இந்த தர்க்காவின் 721ம் ஆண்டு பெரிய கந்தூரி விழாவினையொட்டி புனிதகொடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. சிறப்பு துவா ஓதப்பட்டு 95 அடி உயர கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கந்தூரி விழா தொடங்கியது.
இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக புனித சந்தனக்கூடு ரத ஊர்வலம், வரும் 5ம் தேதி அதிகாலை நடைபெறும். அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும்.