திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், கார்த்திகை மகாதீபத் திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது... பக்திப் பரவசத்துடன் திரளானோர் தரிசனம்
Dec 7 2022 11:55AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஜோதி பிழம்பாய் காட்சித் தந்த அண்ணாமலையாரை தரிசனம் செய்த லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்வதும், நினைத்தாலே முக்தி தருவதுமான உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தால், சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றன. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம் போல் மாட வீதிகளில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை திருக்கோயில் மூலவர் சந்நிதியில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை மகா தீபம், மாலையில், கோவில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சி மீது ஏற்றப்பட்டது. ஜோதி பிழம்பாய் காட்சித் தந்த அண்ணாமலையாரை தரிசனம் செய்த லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலைக்குஅரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர்.
ஐந்தே முக்கால் அடி உயரம் கொண்ட மகா தீப கொப்பரையில், 4 ஆயிரத்து 500 கிலோ நெய் ஊற்றி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் எரிவதற்கு, ஆயிரத்து 100 மீட்டர் கடா துணியினால் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரி பயன்படுத்தப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகரில் திரும்பிய திசையெங்கும் கடல்போல் பக்தர்கள் காட்சியளித்தனர்.
தீபத் திருவிழாவையொட்டி, கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மகா தீபத் திருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.