பழநியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் - மலைக்கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Jan 27 2023 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோயிலில் இரண்டாம் கட்டமாக இன்று காலை 8.15 மணிக்கு ராஜகோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழநி தண்டாயுதபாணி கோயிலில் முதற்கட்டமாக நேற்று கோயிலின் அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் முதல் மலைமேல் உள்ள இரட்டை விநாயகர் கோவில் வரையிலான உப தெய்வ சன்னதிகளின் கோபுரங்களுக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக இன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையொட்டி 5 ஆயிரம் டன் வரையிலான வண்ண மலர்களால் திருக்கோயில் முழுவதும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை 8.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம் தங்க கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர், 8.45 மணிக்கு மலைக் கோயிலில் உள்ள திருச்சுற்று தெய்வங்களின் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, 9:15 மணிக்கு கோபுர கலசங்களுக்கு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெறவுள்ளது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர்.