பழனி தண்டாயுதபாணி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு திருவிழா - ராஜகோபுரத்தில் உள்ள தங்க கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டது
Jan 27 2023 10:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு என்ற சிறப்புக்குரிய பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முதல்கட்டமாக நேற்று மலைக் கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள பாத விநாயகர் கோயில் மற்றும் படிவழிப் பாதை உள்ளிட்ட மலைப்பாதையில் அமைந்துள்ள உப தெய்வ சன்னதி விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று காலை தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தின் தங்க கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது பொதுமக்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது வானில் வட்டமிட்டபடி ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் பொழிந்தபோது பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதற்காக யாக பூஜையில் பயன்படுத்தப்படும் பூஜை பொருட்கள், நறுமணப் பொருட்கள் பழங்கள், மலர்கள் போன்றவை அடுக்கடுக்காக நீண்ட வரிசையில் கோயிலின் பிரகாரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிந்தன. மேலும் இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி சுமார் ஐந்தாயிரம் டன் மலர்கள் திருக்கோயிலிற்கு கொண்டுவரப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலலங்காரங்கள் மற்றும் தோரணங்கள் செய்யப்பட்டன. மலை மலையாக பூக்கள் குவிக்கப்பட்ட காட்சியை கண்டு பக்தர்கள் பிரமித்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.