தமிழகத்தின் பல்வேறு சிவன் ஆலயங்களில் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திய பகவான், சுவாமி மற்றும் அம்பாளுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில், வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மஹா நந்தியம் பெருமானுக்கு, திரவியப்பொரு, அரிசி மாவு, மஞ்சள், தேன்,பால், தயிர், பழவகைகள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர், பல்வேறு நறுமன மலர் மாலைகளுடன் சிறப்பாக அலங்கரித்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி மற்றும் நந்தி பகவானை வழிபட்டனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அரிசி மாவு, மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பிரதோஷத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நந்தி பகவானை வழிபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தூப, தீபத்துடன் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.