தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசித்திபெற்ற பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் : திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக் கடன் செலுத்தினர்
May 22 2023 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடியில் புகழ்பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தூக்கு தேர் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், பூக்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். இதையடுத்து, பக்தர்கள் சமர்ப்பித்த மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்து, தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோலாகலமாக நடைபெற்ற இந்த தூக்கு தேர் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில், கோயில் நிர்வாகத்தின் மூலம் தேங்காய் நாரால் செய்யப்பட்ட தரை விரிப்பில் தண்ணீர் ஊற்றப்பட்டு, பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் கூட்டம் காரணமாக தரிசனத்திற்கு செல்லக் கூடிய கட்டண வழி, இலவச தரிசன வழி என அனைத்து வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்து மலை மீது செல்வதற்காக இயக்கப்படும் ரோப் காருக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் மலையடிவாரம் மற்றும் பாத விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.