தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற திருவிழா, சிறப்பு ஆராதனை வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா களைகட்டியது. ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக 7 நாட்கள், அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியுள்ளது. 17 நாள் திருவிழாவை தொடங்கும் பிரசித்திபெற்ற கோயிலில், வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்னர், நான்கு ரத வீதிகள் வழியாக வந்த பூஜை பொருட்கள், கோயில் உள் வளாகத்தில் வந்து கொடிக்கம்பம் வந்தடைந்தது. பெரும்திரள் பக்தர்களுடன் கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் காப்புக் கட்டினர்.
கும்பகோணம் நாதன் கோயில் ஜகன்நாத பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு திருவிழா பூர்வாங்க பணிகளுடன் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. இதில், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜியர் சுவாமிகள் பங்கேற்றார். 2006 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம், மூலவர் விமானங்கள், கருடன், ஆஞ்சனேயர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் புதுநடுவலூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 14 ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி, ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். அக்னி சட்டி ஏந்தி வந்த பக்தர்கள், பராசக்தி என முழக்கம் எழுப்பினர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே காவிரி ஆற்றங்கரையில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழா களைகட்டியது. மேல உத்தம நல்லூர் கிராமத்தில் உள்ள கோயிலில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
முருகன், விநாயகர் வேடமணிந்த பக்தர்கள் தீமிதித்தனர். வண்ண விளக்கு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த இலுப்பூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 15 ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், கிருஷ்ணன், கர்ணன், அம்பாள் பிறப்பு மற்றும் அம்பாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் களைகட்டின. அம்மனுக்கு சிறப்பு மகா தீபாரதனையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். தப்பாட்டம் மற்றும் வாணவேடிக்கை பக்தர்களை ஈர்த்தது.