தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற வைகாசி திருவிழா மற்றும் வைகாசி பெருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
May 26 2023 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற வைகாசி திருவிழா மற்றும் வைகாசி பெருவிழா மற்றும் குரு பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே இந்திரா நகரில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீசட்டி எடுத்து பொங்கல் வைத்து வழிபட்டனர். பாரம்பரிய முறைப்படி அம்மன் பூங்கரகத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்திருவிழாவிற்கு சென்னை, பெங்களூரு, கேரளா, கோவா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை விழா கடந்த 24, 25 ஆகிய நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நமிநந்தி அடிகள் தெய்வ சேக்கிழார் பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கைலாய வாத்தியங்கள் மற்றும் வாண வேடிக்கையுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முக்கிய வீதி வழியாக சுவாமி திருவீதி அழைத்து வரப்பட்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லை அடுத்துள்ள மோகனூர் அருகே உள்ள காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில் சஷ்டி திருநாளை முன்னிட்டு கொங்கு நாட்டின் பாரம்பரிய ஒயிலாட்டம் நடைபெற்றது. இந்த ஒயிலாட்டத்தில் முருக பெருமானின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.