தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சுவாமிகளின் திருவீதி உலா, திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
May 29 2023 6:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சுவாமிகளின் திருவீதி உலா, திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, திருத்தளிநாதர் சுவாமிக்கும் சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவை வழங்கப்பட்டன.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில், தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளின் சகோபுர வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், உற்சாகமாக ஆடிப்பாடி முருகனை வழிபட்டபடி செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 86 நாட்களில் 70 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. 76 கிராம் தங்கம், 8 கிலோ வெள்ளி ஆகியனவும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.