தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆலயங்களில், மாசித் திருவிழாவை யொட்டி, திருத்தேரோட்டம் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில், மாசித் திருவிழாவின் 8-ம் நாளான நேற்று, பச்சை சாத்து நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், பச்சை அணிகலன்கள் அணிந்து வள்ளி, தெய்வானை அம்பாளுடன் சுவாமி ஆறுமுகநயினார் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், 8 ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பச்சை மலர்களை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருள, திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். விழாவின் நிறைவுநாளான இன்று, அம்மன் நீராடல் மற்றும் வெள்ளிகாமதேனு வாகனத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதனிடையே, தஞ்சையில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் திருவிழாவான பச்சைக்காளி மற்றும் பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி, கோடியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட காளிகள், தஞ்சை மேலவீதியில் ஆட்டம் ஆடி உறவாடும் காட்சிகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சிவ, வைணவ ஆலயங்களில் மாசி மகப்பெருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ஆம் நாள் திருவிழாவாக, ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் திருக்கல்யாண வைபவமும், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் வெண்ணைத் தாழி அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதேபோல், வைணவத் தலங்களான ஸ்ரீசக்ரபாணி ஆலயம், ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் யானை வாகனங்களில் ஸ்வாமிகள் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணத்தில் உள்ள நடனமா காளியம்மன் ஆலயத்தில், பாலி உற்சவத்தையொட்டி, பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர், பால்குடம் சுமந்தும், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர். பின்னர், கோயிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
திருச்சி, கொள்ளிடம் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகருப்பண்ணசுவாமி திருக்கோயிலில், மகா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.