கும்பகோணம் மாசிமகப்பெருவிழா : ஏராளமான பொதுமக்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடல்
Mar 11 2017 12:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் மாசிமகப்பெருவிழாவான இன்று விடியற்காலை முதலே ஏராளமான பொதுமக்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பகோணத்தில் மாசிமகாப்பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி இன்று காலை மகாமக குளத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்து வருகின்றனர். இந்நிகழச்சிக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ சக்ரபாணி சுவாமி ஆலயத்தின் திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக ஸ்ரீ சக்ரபாணி, ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் ஆலயங்களில் பல்வேறு வாகனங்களிலும், ஓலைச்சப்பரங்களிலும், சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றன.
நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜபெருமாள் ஆலயத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. 4 ரத வீதிகள் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற்றது. அலங்கார மண்டபத்தில் தாணுமாலைய சுவாமி அறம்வளர்த்த நாயகி அம்மன் திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடத்தப்பட்டது. அப்போது, பெண்கள் குலவையிட்டதுடன், வேதமந்திரங்களும் முழங்கின. திருக்கல்யாணத்திற்கு சாட்சியாக கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, வழிபட்டனர்.