திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா - பச்சைப்பட்டினி விரதம் தொடங்கியது : ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்
Mar 12 2017 11:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், பூச்சொரிதல் விழா மற்றும் பச்சைப்பட்டினி விரதம் ஆகியவை இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
திருச்சியை அடுத்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்திப் பெற்றதாகும். இக்கோயிலில் மாசிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த 28 நாட்களும் பக்தர்களின் நலனுக்காக மாரியம்மன் விரதம் இருப்பதாக ஐதீகம். பச்சைப்பட்டினி விரத காலத்தில் அம்மனுக்கு இளநீர், நீர்மோர், பானகம் மற்றும் துள்ளுமாவு மட்டுமே படைக்கப்படும். அதன்படி, இன்று காலை விக்னேஸ்வர பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்சொரிதல் விழாவும், பச்சைப்பட்டினி விரதமும் தொடங்கின. ஆலய இணை ஆணையர் திரு. தென்னரசு தலைமையில் ஏராளமானோர் உடன் வர யானை மீது பூந்தட்டு எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. இன்றுமுதல் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டு வரும் பூக்களைக் கொண்டு மலர் அபிஷேகம் நடைபெறும். இவ்விழாவையொட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.