கோபிசெட்டிபாளையம் கொங்கஹள்ளி வனப்பகுதியில் உள்ள மல்லிகார்ஜூனா சுவாமி கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்
Mar 15 2017 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக - கர்நாடக எல்லையில் தாளவாடி அருகே கொங்கஹள்ளி என்ற வனப் பகுதியில், மூன்று மலைகளுக்கு நடுவே மல்லிகார்ஜூனா கோயில் அமைந்துள்ளது. லிங்காயத்து இன மக்களுக்கு சொந்தமான இந்த கோயிலில், 18 கிராமங்கள் சார்பில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ருத்திராபிஷேக பூஜையுடன் தொடங்கிய இந்த நிகழச்சியில், பாறை குகையில் சுயம்புவாக நிலை கொண்டுள்ள லிங்கத்துக்கு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனைதொடர்ந்து மல்லிகார்ஜூனா சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பூசாரி மட்டும் இறங்கினார். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியில் உள்ள ஜெயவிளங்கி அம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து அம்மனை தரிசித்தனர்.
மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பால்குடம் மற்றும் அக்னி சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.