திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் ஆலயத்தில் தெப்போற்சவத்தையொட்டி தாயார் வீதியுலா : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Mar 21 2017 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம், உறையூர் கமலவல்லி நாச்சியார் ஆலயத்தில், தெப்போற்சவத்தையொட்டி தாயார் வீதியுலா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் இரண்டாவதாக விளங்கும், பிரசித்திபெற்ற உறையூர் கமலவல்லி தாயார் ஆலயத்தில், ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா 7 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத்திருவிழாவின் 3 நாளான நேற்று, கமலவல்லி தாயார் வீதியுலா நடைபெற்றது. முன்னதாக கமலவல்லி தாயார் முத்து நீள்முடியும், மார்பில் பதக்கம் மற்றும் முத்து திருவாபரணங்கள் சூடியபடி, மூலஸ்தானத்திலிருந்து தங்க பல்லக்கில் எழுந்தருளி ஆலய பிரகாரங்களில் வீதி உலா வந்தார். இதையடுத்து கண்ணாடி சேவை கண்டருளிய பின்னர், ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கூடிநின்று சுவாமி தரிசனம் செய்தனர்.