சித்திரை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரிய நந்திக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகப் போற்றப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நந்திக்கு, சித்திரை பிரதோஷத்தை முன்னிட்டு, அரிசி மாவு, மஞ்சள், பஞசாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர் மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தி, அருகம்புல், சாமந்திப்பூ, உள்ளிட்ட மலர்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று பெரிய நந்தியையும், அருணாச்சலேஸ்வரரையும் தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயிலில், சித்திரைத் திருவிழாவின் 3-ம் நாளான இன்று உடையவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பிரம்மோற்சவமும் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, வழக்கம் போல இந்த ஆண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ரெங்கநாதர் சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கும் பட்டு வஸ்திரங்களும், தாயாருக்கு பட்டுப் புடவைகளும் கொண்டுவரப்பட்டன.
முன்னதாக, ஆண்டாள் கோயில் வஸ்திர மரியாதை ஊர்வலம், ரங்க விலாச மண்டபத்திலிருந்து புறப்பட்டு உத்திர வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. நாளை நடைபெறவிருக்கும் திருத்தேரோட்டத்தின்போது, இந்த வஸ்திரங்கள் நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்படும்.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் 8-ம் நாளான இன்று, நம்பெருமாள், வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருத்தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.