தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Apr 26 2017 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில், அருள்மிகு ஸ்ரீநெல்லையப்பர் சமேத காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாகத் தொடங்கியது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிலையில், சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுக்கு வெள்ளி அங்கி அணிந்து திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் மஹாகாளியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் கலந்து கொண்ட 508 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், சித்ரா பவுர்ணமி அடுத்த மாதம் 9ம் தேதி நள்ளிரவு 1.50 மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 3.31 மணி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தினத்தில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சிறப்பு பேருந்துகள், குடிநீர், கழிப்பிட வசதி, 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுக்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் 2 ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பழமை வாய்ந்த செபாஸ்தியார் ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி ஊர்வலம் ஆலயத்தின் வளாகத்திலிருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பேராலய பங்குத் தந்தை சிறப்பு திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.