ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயிலில், சித்திரை திருவிழாவை யொட்டி, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீசந்தனமாரியம்மன் திருக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பூக்குழி இறங்குதல் நேற்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இவ்விழாவில், பெண்கள், குழந்தைகள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஈரோடு மகிமாலீஸ்வரர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அப்பரடிகள் ஆராதனை நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் அறுபத்து மூவர் நாயர் திருவீதியுலா நிகழ்ச்சியும் வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில், சித்திரை அமாவாசையை யொட்டி, சர்வ மங்கள மஹா யாகம் நடைபெற்றது. இதற்காக யாகசாலை அமைத்து, ஆயிரத்து 8 மூலிகை, 500 வகையான புஷ்பங்களைக் கொண்டு இந்த யாக வேள்வி செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர் பங்கேற்று வழிபட்டனர்.
இதனிடையே, திருச்சி மணிகண்டம் மகாமாரியம்மன் ஆலயத்தில், மழை பொழிய வேண்டியும், உலக நன்மைக்காகவும், 508 குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபட்டனர்.