சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன.
பிள்ளையார் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நாளை விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கின. 108 யாக குண்டங்கள் அமைத்து, தலைமை சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், கண்காணிப்பு கேமரா அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டனர்.
இதனிடையே, திருத்தணி முருகன் கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருத்தேருக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 5-ம் தேதி இத்தேர் நான்கு ராஜவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
பருவமழை பொழியவும், விவசாயம் செழித்தோங்கவும் வேண்டி தஞ்சை பெரியகோயிலில் தொடர்ந்து 8 மணி நேரம் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாடசாலை மாணவர்கள் வேதபாராயணம் செய்த பின்னர், கொடிமரத்திற்கு பூஜை செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி, பெரியநாயகி அம்மன் கோயிலில் மழை வேண்டி வருண பூஜை நடைபெற்றது. திருஞானசம்பந்தர் அருளிய மழைவேண்டிய பதிகத்தை கோயில் ஓதுவார்கள் பாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மழை பெய்ய வேண்டி வருண யாகம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க நடைபெற்ற யாகத்தில், திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி அருகே முருக்கம்பள்ளம் கிராமத்தில், ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் மகாபாரத மகோத்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. 18 கிராம மக்கள் இணைந்து அம்மனுக்கு சீர்வரிசைப் பொருட்களுடன் கலந்துகொண்டனர்.