தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர்
Jun 20 2017 8:27AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தியதுடன், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் கமலவல்லி நாச்சியார் ஆலயத்தில் வைகாசி மாதம் நடைபெறும் தாயார் கோடை உற்சவம் வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் நடைபெறவது வழக்கம். வெளிக்கோடை உற்சவம் 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உள்கோடை உற்சவம் இன்று தொடங்கியது. இதில் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கண்ணாடி சேவை கண்டருளிய பின்னர் 4 கால் மண்டபத்தை வந்தடைந்தார். பின்னர் பூப்போர்வை சார்த்தப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கமலவல்லி தாயாரை வழிபடடனர்.
திருவாரூர் மாவட்டம், மாங்குடி கட்டளை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசவுந்திரநாயகி சமேத ஸ்ரீமகா காலநாதர் ஆலயத்தில் நேற்று வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாகவேள்வி நடத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொ்ணடு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருவாரூர் ஸ்ரீசீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி உற்சவ பெருவிழா கடந்த 11ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. இவ்விழாவின் 9ம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் தீமிதித் திருவிழா நேற்று நடைபெற்றது. ஆலயத்தின் மூலஸ்தானத்திற்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவ மூர்த்தியுடன் ஆழித்தேரோடும் வீதிகள் வழியாக வலம் வந்து தீகுண்டத்தில் இறங்கினர். இவ்விழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி, சாந்திநகரில் அமைந்துள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில் முதல் மேடை அமைத்து நற்கருணை ஆராதனை மற்றும் ஆசிர்வாதம் நடைபெற்றது. தொடர்ந்து புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இரண்டாவது மேடையில் நற்கருணை ஆராதனையும், ஆசீர்வாரமும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில் பங்குதந்தை சூசைஅடிகள், சிறப்புத்திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறைமக்களுக்கு இறுதி ஆசீர்வாதத்தை வழங்கினார். இதில் கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.