தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா : பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
Jun 26 2017 6:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆலயங்களில், மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் திருக்கோயிலில், புணரமைக்கும் பணிகள் நடைபெற்று நிறைவடைந்தன. இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவாச்சாரியார்கள் யாகசாலைகள் அமைத்து கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து இன்று 3ம் கால ஹோமங்கள் நிறைவு பெற்று பூரணாகிதி செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் எடுத்து கலசத்திற்கு ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிநாராயண பெருமாளை வழிபட்டனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு சிவந்தியப்பர் திருக்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 23ம் தேதி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் இருந்து எடுக்கப்பட்ட புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த மதுராமேலாத்தூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை மனமுருக வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், மாறவர்ம சுந்தரபாண்டிய தேவரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதசுவாமி திருக்கோவில் இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதலில் வாஸ்து பூஜையும், பின்னர் சொக்கநாதர்- மீனாட்சி-காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, கொடி பரிவட்டம் பல்லாக்கில் நான்கு ரதவீதிகளில் உலா வந்தது. பின்னர் கொடிமரத்திற்கு சந்தனம், பன்னீர், பால் உள்பட 17 வகையான அபிஷேகத்திற்கு பின் கொடி ஏற்றப்பட்டது. பக்தர்கள் ஓம் நவச்சியாவ நம நாமத்தை உச்சரித்தப்படி சாமிதரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டசுவாமி திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் பணிகள் களைகட்ட துவங்கி உள்ளது. வரும் 28ம் தேதி காலை 7 மணி அளவில் அஷ்டபந்தன மாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக இந்துசமய அறநிலையத்துறையும் மற்றும் கோவில் நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.