ஆடிப்பெருக்கையொட்டி காவிரி, நொய்யல் ஆற்றங்கரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நீர்நிலைகளில் இன்று ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. புதுமண தம்பதிகள் பலர் இதில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதமும் தனி சிறப்பு பெற்றதாகும். குறிப்பாக 18ம் தேதி அன்று வரும் ஆடி பெருக்கு வெகுசிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்த முறையும் வழக்கமான உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு களைகட்டியுள்ளது. இந்த விழாவுக்கு மிகவும் பேர்போன பகுதிகளில் ஈரோடு பாவனி கூடுதுறையும் ஒன்றாகும். அங்குள்ள பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் பகுதியில் காவிரி, பவானி, அமிர்தாநதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் இன்றுகாலை ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் வழக்கம்போல் இன்றும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். குறிப்பாக புதுமண தம்பதிகள் சிறப்பு சடங்குகளை செய்து வழிபட்டனர்.
இதேபோல் நாகை மாவட்டத்திலும் ஆடிப்பெருக்கையொட்டி காவிரி நதி கடலில் கலக்கும் பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வழிபாடு நடத்தினர். காப்பரிசி, கருகமணி வைத்து வழிபாடு செய்யப்பட்டது. புதுமண தம்பதிகள் மாங்கல்யம் மாற்றும் வைபவத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
புகழ்பெற்ற திருவாரூர் தியாராயசுவாமி ஆலயத்தின் வற்றாத புனித தீர்த்த கமலாலய குளத்தில் பல்வேறு பூஜைப் பொருட்கள் வைத்து பலரும் காவிரி அன்னையை வழிபட்டனர்.
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆடிப்பெருக்கு விழாவில் பங்கேற்றனர். புதுமண தம்பதிகள் பலரும் தாலி மாற்றும் வைபவத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே அமைந்திருக்கும் முல்லையாற்றில் ஏராளமான பொதுமக்கள் புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். அங்கு அமைந்துள்ள கௌமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அரியலூர் பகுதியில் உள்ள செட்டி ஏரியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு மாங்கல்ய பூஜை நடத்தினர். பழம், வெற்றிலை, குங்குமம் கொண்டு பூஜை மற்றும் சடங்குகளை செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி, சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.