விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்
Aug 20 2017 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விநாயகர் சதுர்த்தியையொட்டி, தேனி அருகே விதவிதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்காக சிலை தயாரிப்பு பணிகள் பல்வேறு இடங்களில் களைகட்டியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில், மாசு கட்டுப்பாட்டுத்துறையின் விதிகளுக்கு உட்பட்டு கூழ், கிழங்கு மாவு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகிறது. பொதுமக்களை கவரும் வகையில், மாப்பிள்ளை விநாயகர், சக்தி விநாயகர், சிங்க விநாயகர், வலம்புரி விநாயகர், கற்பக விநாயகர், திருஷ்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இதேபோன்று, கைவினைப் பொருட்களின் சந்தையாக திகழும் திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கணபதி தரிசனம் எனப்படும் விநாயகர் சிலைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. 150க்கும் மேற்பட்ட தோற்றங்களுடன் பஞ்சலோகம், பித்தளை, வெள்ளைமரம், மாக்கல், ஸ்படிகம் உள்ளிட்ட பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. வரும் 27ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், 70 ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட விநாயகர் சிலைகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.