தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் கோலாகலம் - ஏடு தொடங்கும் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் பங்கேற்று மகிழ்ந்த பெற்றோர்
Oct 1 2017 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விஜயதசமி திருநாளான இன்று தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெற்றோர் மடியில் அமர்ந்து குழந்தைகள் அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி படிப்பை தொடங்கினர்.
நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான விஜயதசமி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இன்று குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து பள்ளியில் சேர்த்தால் அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால், விஜயதசமியை, வித்யாரம்பம் நிகழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெற்றோர் இதில் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு எழுத்தறிவினை தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு அரிசியில் ஓம் என்று எழுதி எழுத்தறிவினை துவக்கி வைத்தனர்.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள வனமாலீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவி சன்னிதானத்தில் குழந்தைகளின் நாவில் கோவில் பூசாரிகள் தங்க ஊசியால் அகர எழுத்துக்களை எழுதி ஏடு தொடங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டனர். கோவில் நம்பூதிரி குழந்கைளின் நாக்கில் எழுதி அவர்களது ஆரம்பக் கல்வியைத் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி தேவி ஆலயத்தில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முன்பு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் நாவில் தேனால் எழுதியும், நெல் தானியத்தில் தமிழ் மொழியின் ஆரம்ப எழுத்தான அ என்ற எழுத்தை எழுதவைத்தும் ஏடுதொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டத்தின் பல கோயில்களில் அரிசியைப் பரப்பி அதில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எழுத கற்றுக்கொடுத்தனர். சரஸ்வதி பூஜை அன்று வீடுகளில் வைத்து வழிபட்ட புத்தகங்களை பல மாணவ, மாணவிகள் பக்தியுடன் எடுத்துவந்து ஆர்வத்துடன் படித்தனர்.
புதுச்சேரியில் உள்ள லட்சுமி ஹயக்கிரீவர் பெருமாள் கோவிலில் கல்வி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லில் குழந்தைகளின் கையைப் பிடித்து எழுத்துக்களை எழுதவைத்து அட்சராப்யாசம் நடைபெற்றது. இதில் திரளான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.