கந்தசஷ்டி திருவிழா கோலாகல தொடக்கம் - திருச்செந்தூரில் விருதமிருக்கும் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு
Oct 20 2017 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள் கடலில் புனித நீராடி அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு நடத்தி விரதத்தை தொடங்கினர்.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலாகும். இங்கு சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும் அதனை தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 5 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலை மண்டபத்துக்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவையொட்டி 6 நாட்கள் கோவில் வளாகத்திலும், சஷ்டி மண்டபத்திலும் பக்தர்கள் விரதம் மேற்கொள்வார்கள். விரதம் மேற்கொள்ளவிருக்கும் பக்தர்கள் இன்று காலை கடலில் புனித நீராடி அங்கப்பிரதட்சனம் செய்து வழிபட்டு விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் 25ம் தேதி மாலை நடைபெறவுள்ளது.