தமிகத்தின் பல்வேறு கோவில்களில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் சுவாமிக்கு சொக்கப்பனை மற்றும் அம்பாளுக்கு கார்த்தகை ருத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றம் சொக்கப்பனை எரித்தல் நடைபெற்றது. சாரல் மழைபெய்த போதும், விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு தேனி மாவட்டம் சுருளிப் பட்டியில் பாரம்பரிய முறைப்படி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. கடுமையான மழை காலங்களில் இது போன்று சொக்கப்பனை கொழுத்தினால் அது சாயும் திசை நோக்கி மழை சென்று விடும் என்றும், அதன் சாம்பலை எடுத்து விவசாய விளை நிலங்களில் போட்டால் விவசாயம் செழிக்கும் என்ற ஐதீகப்படி கிராம மக்கள் ஒன்று திரண்டு சொக்கப்பனை கொழுத்தி மகிழ்ந்தனர்.
ஈரோடு கோட்டை அருள்மிகு ஈஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகைத் திருநாளையொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து கோவில் முன்பு உள்ள தீபத்தூணில் விளக்க ஏற்றப்பட்டது. பின்னர் சொக்கப்பனை கொளுத்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூரில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில்தீபத்திருவிழாவை முன்னிட்டு, சுமார் 10 அடி உயரமுள்ள மூங்கில் மற்றும் ஓலைகளால் கட்டப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பிரம்மாவும், விஷ்ணுவும், சிவபெருமானின் அடி, முடியைக் காண சென்றபோது, சிவபெருமான ஜோதி வடிவாக காட்சி அளித்ததை விளகக்கும் வகையில் இந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
கார்த்திகைத் தீப திருநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள சிவன்கோவிலில் பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 21 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
இதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் சுமார் 25 அடி உயர சொக்கப்பனையில் நாரணி தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூரை அடுத்த தாராபுரம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, கார்த்திகையையொட்டி புதிய அகல் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.