இயேசு கிறிஸ்து பிறப்பு தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
மண்ணில் தோன்றிய புனிதராம், அன்பும், கருணையும் மட்டுமே தாரகமந்திரமாகக் கொண்டு, மனிதரில் புனிதராய் வாழ்ந்து காட்டிய இயேசுபிரான் இப்பூவுலகில் அவதரித்த தினமான இன்று, கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சென்னையில் உள்ள பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
புகழ்பெற்ற சென்னை சாந்தோம் தேவாலயத்தில், நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதேபோல், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள புனித இளைப்பாற்றி மாதா திருத்தலத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் தூய பவுல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில், திரளான கிறிஸ்தவ பெருமக்கள், புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் நள்ளிரவு சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.
தருமபுரி தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த குடிலில், குழந்தை ஏசு வைக்கப்பட்டு, வாழ்த்து மற்றும் துதிப் பாடல்கள் பாடப்பட்டன.
திருவண்ணாமலை தூய உலக மாதா ஆலயத்தில், சிறப்பு திருப்பலி பாடல்கள் பாடி, கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் புனித பிரான்சிஸ் சவேரியார், மகாராஜபுரம் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குழந்தை ஏசு பிறப்பு நிகழ்ச்சி, வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில், வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் ஆரோக்கிய அன்னை பேராலயம், உலகமீட்பர் பசிலிக்கா, புனித வியாகுல அன்னை ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம், புனித சூசையப்பர் ஆலயம் உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்த ஆலயங்களில், நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அனைவரும் உற்சாகமாக துதிபாடல்களை பாடியும், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், தூய மேரிமாதா தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
மதுரை கீழவாசல் தூயமரியன்னை பேராலயத்தில், மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திண்டுக்கல் புனித வளனார் தேவாலயத்தில், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை தேவாலயத்தில், கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டிருந்தது.
உலக ரட்சகர் என்று போற்றப்படும் இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடும் வகையில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய சவேரியார் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், புத்தாடை அணிந்த திரளான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புனித சவேரியார் பேராலயத்தில், நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
புதுச்சேரி புனித ஜென்மராக்கினி அன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, வில்லியனூர் லூர்து அன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.