தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jan 19 2018 11:57AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்னக திருப்பதி என்றழைக்கப்படும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஒப்பிலியப்பர், பூமி தேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஒப்பிலியப்பரையும், பூமி தேவியையும் தரிசனம் செய்தனர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவையொட்டி தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர். இதனையொட்டி மணலூர்பேட்டையில் உள்ள தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில், திருவண்ணாமலை அருணாச்சலேவரர் கோயிலில் இருந்து உண்ணாமலை சமேத அண்ணாமலையார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து வந்திருந்த சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக - ஆராதனைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனர்.
நாகை மாவட்டம் சோழம்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் மற்றும் தீர்த்தவாரி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாகையில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாங்கூர் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கருடசேவை நிகழ்ச்சியில், 11 கோயில்களை சேர்ந்த பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, மக்கள் நலமுடன் வாழவேண்டி நவசண்டி ஹோமமும், கலசபூஜையும் நடைபெற்றது. இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதனிடையே, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயத்தின் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியில் கண்கவர் வாணவேடிக்கையும் நடைபெற்றன.