மாசித்திருவிழா : தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் - பக்தர்கள் சுவாமி தரிசனம்
Mar 4 2018 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாசித்திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் மாரியம்மன் திருக்கோயில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தசாவதாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி தேவராட்டம், புராண நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திருக்கோயிலில் விடிய விடிய நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விடியவிடிய திருக்கோயில் வளாகத்தில் காத்திருந்து அம்மனின் அவதாரங்களை தரிசித்தனர்.
மாசி மகப் பெருவிழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் வைணவ ஆலயங்களில் நிறைவு நிகழ்ச்சியாக புஷ்ப பல்லக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் வண்ண மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த பல்லக்கில் மங்களாம்பிகை சமேத ஆதி கும்பேஸ்வரர் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் வருடாந்திர திருவிழாவிற்காக பஞ்சபூதங்கள் நெல் மணிகளை கொண்டு வந்து சேர்க்கும் ஐதீக வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீசுந்தரர், பரவைநாச்சியார் சுவாமிகள் திருவாரூர் ஆழித்தேரோடும் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் பக்தர்களுக்கு நெல்மணிகள் பிரசாதமாக வழங்கப்பட்டன.