பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வரும் 21-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்
Mar 15 2018 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவிலின் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல-மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை. இதுதவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழாவின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு வழிபாடுகள் நடைபெறும்.
அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். இன்று முதல் தினமும் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.
21-ந் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மதியம் உற்சவ பலி சிறப்பு பூஜை நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு, 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 30-ந் தேதி பம்பை ஆற்றில் பகல் 11 மணிக்கு ஐயப்பனுக்கு ஆறாட்டு வைபவம் நடைபெறுகிறது. பங்குனி மாத பூஜை மற்றும் கோவில் திருவிழா தொடர்ச்சியாக வருவதால் வருகிற 30-ந் தேதி வரை கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.